Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Sunday, September 15, 2013

அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்-அண்ணாவிடம் - கி. வீரமணி வேண்டுகோள்

தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.
நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குத் தொல்லை  கொடுத்தேன்.
ஏனென்றால், அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்து ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன். செப் டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக் கொண்டு இருந்தார். நான்போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே, கட்டுரை தானே  எழுதி கொடுத்துவிடுகிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.
அண்ணா அவர்கள் அடுத்து மது ரைக்குச் சென்றார். அண்ணா அவர் களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வர வேண்டியது முக்கியம்.
மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர் களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.
அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்து விட்டு அய்யா அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந் தார். அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம். அந்தக் கட்டுரை வருமாறு:
கலவரம் நடக்காத பொதுக்கூட்டம் எது?
எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஆண்டு பலவற்றுக்குப் பிறகு  அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.
வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடு களில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும்  தாடி போகும் தடி போகும்  உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண் டிய நிலை.
பெரியாரால் திருந்திய
தமிழரோ பலப்பலர்!
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்  வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந் திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டு தான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்!
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங் கும் இருந்ததில்லை.
அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழே டுகள் புதிதுபுதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப் பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!
எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என் பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக் கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டி ருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப் போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத் தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.
தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச் சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்! அவருடைய பேச்சோ  அது தங்கு தடை யின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது  மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு ஓசை நயத்துடன்  ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்  என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.
பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!
மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்  எது நேரிடினும்  என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர்கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவு களை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண் டின் அளவு, மிகப் பெரியது.
பெரியார் கண்ட தமிழகம்!
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட் டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!  முடிகிறதா! நடக்கிறதா!  விட்டு வைத் திருக்கிறார்களா!  என்று கேட்கிறார்கள்  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!
அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்  பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரை களை; கூடிப் பேசுவார்கள் சிறிய மண்ட பங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!
இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக்கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றா லும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம்  ஒரு கால கட்டம்,  ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.
அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.
நேர்மைக்காகப் போராடிய பெரியார்!
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப் படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்தி டினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.
அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!!
அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று  குறிப்பிட்டேன். மேலும் பல ஆண்டுகள் அவர் நம் முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண் டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமை வதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவ தற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்ய மில்லை. வாழ்க பெரியார்!
(பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு விடுதலை மலருக்கு எழுதிய கட்டுரை)

Sunday, December 5, 2010

அண்ணாவுக்கு வரவேற்பு மடல்

11.8.1940இல் தாராசுரம் நீலமேகம் வாசகசாலை திறப்புவிழாவன்று
சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு வாசித்தளித்த வரவேற்பு மடல்

இத்தமிழ் நாட்டில் உள்ள படித்த மக்களின் அறிவையும் பாமர மக்களின் அறிவையும் - விருத்திசெய்யும் வழியை நன்குணர்ந்து அதன்படி தொண்டுபுரிந்து வரும் நேயரே உங்கள் வரவு நல்வரவாகுக!அஞ்சா நெஞ்சம் படைத்த அண்ணாதுரையே வருக! வருக!!
அரசியல் ஞானி அண்ணாதுரையே வருக! வருக!!
இன்று அரசியலை மக்களுக்குத் தெள்ளென எடுத்துக் கூறியும், காங்கிரசின் ஆட்சியின் அக்ரமத்தை எடுத்து ஓதியும் தமிழ்நாடு தனி நாடாவதற்கு முயற்சிக்கும் தோழரே உங்கள் வருகை நல் வருகையாகுக!
இந்தியை எதிர்த்த இளஞ்சிங்கமே வருக! வருக!!
தாய் மொழியைக் காக்கும் பொருட்டு சிறை சென்று உடல்நலங்குன்றி மனத்தளவில்லாமல் வெளிவந்து, வீரமுடன் ஒழிப்போம் இந்தியை என்று கூறி, அதை ஒழித்த நண்பரே உங்கள் வருகை நல்வரவாகுக!
தங்கள் வருகையால் நாங்கள் இன்புற்று, உளங்களித்து உங்கள் தொண்டிற்கு உதவி புரிவோம் என்பதற்கு அய்யமில்லை.
இங்ஙனம்
நீலமேகம் வாசகசாலையார், தாராசுரம்.