Showing posts with label வ.உ.சி. Show all posts
Showing posts with label வ.உ.சி. Show all posts

Wednesday, March 14, 2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 1

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலி யார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
                                                                                                                        - விடுதலை 12.3.2012