Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts

Saturday, November 17, 2012

பாரதிராஜாவா இப்படி?


புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர் களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்
(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)
பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.
இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினை வூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு.
வேதம் புதிது என்ற மிகச் சிறப்பான படம் ஒன்றைத் தயாரித்தார் பாரதிராஜா.
ஆனால் அந்தப் படத்தை வெளியிடு வதில் தடங்கல்; படம் ஒன்றை எடுத்து உரிய காலத்தில் அதனைத் திரையிட வில்லையென்றால் தயாரிப்பாளன் நெற்றியில் நாமம்தானே.
படத்தில் பார்ப்பான் ஒருவன் பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி, ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தோப்பனார் இறந்த பிறகு தேவர் குடும்பத்தில் வளரும் சூழல்.
தேவர் வேடத்தில் நடித்த சத்யராஜ் சக்கைப் போடு போட்டார். நக்கல் ஏகடி யம் எல்லாம் உண்டு.
பார்ப்பனர்கள் வட்டாரத்திலே சல சலப்பு! அப்பொழுது குடியரசு தலைவரோ பட்டுக்கோட்டை ஆர். வெங்கட்ராமய்யர்; முதல் அமைச்சரோ எம்.ஜி.ஆர். அவர்கள்.
முதல் அமைச்சரின் கதவைத் தட்டினார்கள். முதல் அமைச்சர் எந்தத் துருப்பைப் பயன்படுத்தினார், குடியரசு தலைவரிடம் தெரியுமா?
இந்தப் படத்தை உடனடியாகத் திரையிட அனுமதிக்காவிட்டால், பிரச் சினையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கையிலே எடுத்துக் கொள் வதாக இருக்கிறார் என்று போட்டாரே ஒரு போடு! அப்புறம் என்ன? வேதம் புதிது திரையரங்குகளில் ஓட ஆரம்பித்து விட்டது.
இவை எல்லாம் மாஜி ராஜாக்களுக்கு வசதியாக மறந்து போய் விட்டதா? இப்பொழுது அவாளின் நேசமும், பாசமும் இரட்டைக் குதிரைகளாக வாசலில் வந்து நிற்கிறதா?
டி.வி. நேஷனல் புரோகிராமில் முதல் மரியாதை இடம் பெறுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு, பிறகு அது இடம் பெறாமல் போய் விட்டது. இதுகுறித்துப் பலர் பலவிதமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏன் இடம் பெறவில்லை என்பது எனக்கும் புரியாத மர்மம். டி.வி.யில் முதல் மரியாதையைப் போடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்னுடைய இண்டர்வூவியூ வேண்டும் என்று சொல்லி ஸ்ரீ வித்யாவைக் கொண்டு என்னை ஒரு இண்டர் வியூவும் எடுத்தார்கள். குறிப்பிடப்பிட்டி ருந்த தேதியில் முதல் மரியாதை ஒளிபரப்பாகவில்லை. விசாரித்தேன். படத்தை இரண்டு மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டியிருப்பதாகச் சொன் னார்கள். படத்தில் நீங்கள் கை வைத்து விட வேண்டாம். நானே குறைத்துத் தருகிறேன் என்று படத்தைத் தருவித்து, நானே இரண்டு மணி நேரத்துக்கு எடிட் பண்ணிக் குறைத்துக் கொடுத்தேன். மறுபடியும் குறிப்பிட்ட தேதியில் படம் ஒளிபரப்பாகவில்லை.
என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்ததில், நீங்க மேலே போய் ட்ரை பண்ணுங்க சார் என்று சொன்னார்கள். இங்கே இருக்கிறவர்கள்தான் அப்படிச் சொன் னார்கள். ட்ரை பண்ணுங்கள் என்றால் எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ லாபியாம். அப்படியெல்லாம் போக நான் விரும்பவில்லை; அது எனக்கு அவசியமும் இல்லை.
(தமிழ்நாடு திரைப்படப் பத்திரிக் கையாளர் சங்கத்தில் நடைபெற்ற கலந் துரையாடலில் பாரதிராஜா உதிர்த்த சில கருத்துக்கள்)
வெள்ளிமணி (தினமணி இணைப்பு) 9.1.1987 பக்கம் 2
இன்னொரு சேதியும் உண்டு.  அது என்னவாம்? பாரதிராஜா பூடக மாகச் சொன்னாரே - அந்த லாபி என்பது என்ன? சங்கராச்சாரியார் வரை வால் நீண்டு கொண்டு போகுமே - அந்த அக்ரகார லாபிபற்றி எப்படி எல்லாம் அவருக்கே உரித்தான முறையில் பற்களை நறநற என்று கடித்து இருப்பார்? - இவையெல்லாம் மறந்து போயிற்றா?
இன்றைக்குத் தமிழர்களுக்கு வந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறந்து விடலாமா?
பார்ப்பன எதிர்ப்பு என்னும் பாம்பின் நச்சுக்கடிக்கு ஆளாவது பெரியாரும் - திரா விடர் இயக்கமும்; அவற்றின் பலனைக் கூசாமல் நெளியாமல் அனுபவிப்ப வர்களோ பாரதிராஜா உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் என்பதை மறந்து விட்டால் அதன் பொருள் பார்ப்பனப் போதை அவர்களின் தலையில் ஏறி விட்டதுதான் பழசை மறந்து விட்டதுதான்!
பாரதிராஜா என்ன சொல்லுகிறார்?
திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்தினது போதும்; பிரா மணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தா தீங்க - என்று வரலாற்று அறிஞர் பாரதி ராஜாவே கூறி விட்டார். நம்ப வேண்டியது தான்.
இவர் கூற்றுப்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற நம்மினத் தலைவர்கள் ஏமாத்துக்காரர்கள் என்று சொல்லும் பொழுது பார்ப்பனர்களுக்குப் பால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக் கும். இப்படி சொன்னதற்காக பாரதி ராஜாக் களுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
மலம் எடுப்பவர்களுக்கு அதன் வாடை மரத்து விட்டது போல. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர இழிவில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு அந்த இழிவு என்பது ருசியாகக்கூட இருக்கும்.
ஈரோட்டிலே இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் யோக்கியதையை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் (11.11.1939 அன்று)
இன்று பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும் நம் மக்கள் அதற்குப் பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல; நாம்தான்; நம் முடைய அறிவீனம் என்ற அசுத்தத் தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும்.
தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ ஆரியனை (பார்ப் பானை) தமிழன் என்று தன்னுடைய நாட்டான் என்று கருதினானோ, அன்றே தமிழனுக்கு உள மாற்றமும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் ஆண் பெண் அடங்கலும் உண்மை வைப் பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின என்று ஈரோட்டிலே இனவுணர்வுடன் சுட்டிக் காட்டினார். ஈரோட்டு ஏந்தல் (11.11.1939).
எப்பொழுது பாரதிராஜா வாயால் பிராமணன் என்று வந்ததோ, அந்தக் கணமே தன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று பொருள்.
தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதே! என்று தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்தது என்ன விளை யாட்டா?
பார்ப்பான் தமிழ் பேசுகிறானாம் - அதனால் அவன் தமிழனாம்.
அறிஞர் அண்ணா தான் மிக அழகாகச் சொன்னார். ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆங்கிலேயர்களைவிட அழகாக ஆங்கிலம் பேசுவார் -அவரை சில்வர் டங்க் சீனிவாசய்யர் என்று கூடச் சொல்லுவதுண்டு - அதற்காக அவர் என்ன ஆங்கிலேயர் ஆகி விட்டாரா? என்று கேட்டதைத்தான் மெத்த படித்த பாரதிராஜா அவர்களுக்கு நினைவூட்டு கிறோம்.
பாரதிராஜாக்களை கேட்கிறோம். நெடுஞ்செழியன் என்றும், கரிகாலன் என்றும், அறிவுடை நம்பி என்றும், அன்பழகன் என்றும், அறிவழகன் என்றும், எழிலரசன் என்றும், குலோத் துங்கன், தமிழரசன் என்றும், தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேண்மா என்றும், தமிழ்ச்செல்வி என்றும், கலைச் செல்வி என்றும், செந்தாமரை என்றும், அன்பரசி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியுமா?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டபோது தினமலர் என்ன எழுதியது தெரியுமா -_ பாரதிராஜா அவர்களே?
காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் வாரமலர் 13.6.2004) என்று பார்ப்பன ஏடு எழுதியதை அறிவாரா பாரதிராஜா?
பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு ஏற்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளாரே? என்பது கேள்வி.
அதற்குத் துக்ளக் பார்ப்பனனின் பதில் என்ன தெரியுமா?
நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவ மதிக்காமல் இருந்தால் போதுமே (துக்ளக் 18.8.2009) என்று எழுதினாரே - தெரியுமா பாரதிராஜாக்களுக்கு?
அந்தச் சிலை அவமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையைத் தானே வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார் சோ!
சென்னை மாநகர மேயர் வணக்கத்துக்குரிய மா. சுப்பிரமணியம் அவர்கள் சென்னை - கடை வீதிகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து, அவரே வீதியில் இறங்கிப் பணியாற்றிய போது அதனை மொழி நக்சலிசம் என்று சொன்ன துக்ளக் சோ ராமசாமிகள் தமிழரே என்று நம்பச் சொல்லுகிறாரா அன்புக்கும், பாராட்டுக்கும் உரிய பாரதிராஜா?
இயக்குநர் பாரதிராஜா அவர்களே! காமராசரை - ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று சொன்னது எந்த அர்த் தத்தில்? அதே காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் சொன் னது எந்தப் பொருளில்? இரண்டுக்கும் இடையே இழைந்தோடும் அந்த மெல்லிய இழையைக் காண ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.
இன்றும்கூட கோயில்களில் வழி பாட்டு உரிமை தமிழில் என்றால் எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந் தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் - _ இப்பொழுது சென்று சட்டத்தை முடக்கியவர்கள் முப்புரிப் பார்ப்பனர்கள் என்பது பச்சைத் தமி ழரான பாரதிராஜாக்கள் தெரிந்து கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தும் ராஜாக்களே! பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டவர் நடக்கும் உரிமைக்கு வழி செய்தது யார்?
அரசு பதிவேடுகளில் சூத்திரர்கள் (பார்ப்பனர்கள் வேசி மகன் மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று இருந்ததை நீக்கியது யார்?
சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தது தெரியுமா? அதனை மாற்றியது யார்?
மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று வைத்திருந்த நிபந்தனையை தூக்கி எறிந்தது எந்தக் கட்சி ஆட்சி யில்?
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கா விட்டால் மானியம் கிடையாது; பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் உரிமம் ரத்து என்ற ஆணை பிறப்பித்தது திராவிடர் இயக்க ஆட்சி என்ற அரிச்சுவடியாவது தெரியுமா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கல்வி கற்க இட ஒதுக்கீடு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எந்த அமைச்சரவை?
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடம் வந்தது யாராலே?
இதெல்லாம் தான் திராவிடர் இயக்கம் -_ அதன் தலைவர்கள் _ ஆட்சி _ மக்களை ஏமாற்றிய காரியங்களா?
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் ஏமாற்றுக் காரரா?
அடக்கம் வேண்டாமா? நாக்கு இருக் கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?
தந்தை பெரியார் மறைந்தபோது தலையங்கம் தீட்டாத ஒரே பார்ப்பன ஏடு இந்து என்பதை அறிவீர்களா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்னை மணியம்மையார் மறைவுகளை மரணக் குறிப்பு வெளியிடும் (Obituary) பகுதியில் வெளியிட்டு அவமானப்படுத் திய இந்து வகையறாக்கள் தமிழர்கள் ஆகி விட்டார்களா?
பத்திரிகை உலகில் ஜாம்பவனாகிய சி.பா. ஆதித்தனார் இறந்ததை உள்ளே மறைவு செய்தியாக வெளியிட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்தது தெரியுமா?
திராவிடர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் எந்த வகையிலும் பொருள் வேறுபாடு கிடையாது. திராவிடர்கள் என்பது ஆரியர்கள் இயக்கத்திற்குள் உள்ளே நுழையக் கூடாது என்கிற தற் காப்பு ஏற்பாடு - எத்தனை விளக்கங் களைக் கூறி விளக்கி இருப்பவர் வெண் தாடி வேந்தரான தந்தை பெரியார்.
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டால் அவர்களின் குடும்பப் பெயரோ, பெற் றோர்களின் பெயர்களும் மாறி விடுமா?
ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர் களையோ இழிவுபடுத்த வேண்டாம்!
பாரதிராஜாக்களிடம் இதனை எதிர் பார்க்கவில்லை. வருத்தம்தான்! என்ன செய்வது? தந்தை பெரியாரையும் அவர்தம் திராவிட இயக்கத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொன்ன பிறகு சொரணையற்றவர்களாக நாம் இருக்க முடியாதே!
பாரதிராஜாக்கள் மீண்டும் மனுதர்மத் துக்கு முத்தமிட ஆசைப்பட வேண்டாம். இனம் எது? பகை எது என்று தெரிந்து கொள்வதில்கூட தடுமாற்றமா? தமிழர் உணர்வு இதுதானா?
- மின்சாரம்-(விடுதலை ஞாயிறு மலர்  17.11.2012) 

Wednesday, March 14, 2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 3

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும்  இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சார மாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரியக் கலாச் சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வரு கிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படை யாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்று பவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.
சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று  கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா?  இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக் கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா?  எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது?  ஆறுகள் இல்லையா?  இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகை யில் கோதாவரியுண்டு, கிருஷ்ணா வுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்?  உலோகங்கள் இல்லையா?  கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை?  அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா?  கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன?  மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு  நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா?  எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா?  அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா?  எங் களுக்கு  முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?  இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே?  அது சாத்யமா?  யோசித்துப் பார்த்தார்களா?  வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா?  அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா?  எங்கே இருக்கிறது ஒற்றுமையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு?  இவர்கள் கூறும் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?
                                                                                                                                                                        - விடுதலை 14.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 2

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவிடர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
                                                                                                                                                                            - விடுதலை 13.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 1

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும்  - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலி யார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம்  தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே!  பெரியார் அவர்களே!  தோழர்களே!   தாய்மார்களே!   நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள்  என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
                                                                                                                        - விடுதலை 12.3.2012