11.8.1940இல் தாராசுரம் நீலமேகம் வாசகசாலை திறப்புவிழாவன்று
சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு வாசித்தளித்த வரவேற்பு மடல்
இத்தமிழ் நாட்டில் உள்ள படித்த மக்களின் அறிவையும் பாமர மக்களின் அறிவையும் - விருத்திசெய்யும் வழியை நன்குணர்ந்து அதன்படி தொண்டுபுரிந்து வரும் நேயரே உங்கள் வரவு நல்வரவாகுக!அஞ்சா நெஞ்சம் படைத்த அண்ணாதுரையே வருக! வருக!!
அரசியல் ஞானி அண்ணாதுரையே வருக! வருக!!
இன்று அரசியலை மக்களுக்குத் தெள்ளென எடுத்துக் கூறியும், காங்கிரசின் ஆட்சியின் அக்ரமத்தை எடுத்து ஓதியும் தமிழ்நாடு தனி நாடாவதற்கு முயற்சிக்கும் தோழரே உங்கள் வருகை நல் வருகையாகுக!
இந்தியை எதிர்த்த இளஞ்சிங்கமே வருக! வருக!!
தாய் மொழியைக் காக்கும் பொருட்டு சிறை சென்று உடல்நலங்குன்றி மனத்தளவில்லாமல் வெளிவந்து, வீரமுடன் ஒழிப்போம் இந்தியை என்று கூறி, அதை ஒழித்த நண்பரே உங்கள் வருகை நல்வரவாகுக!
தங்கள் வருகையால் நாங்கள் இன்புற்று, உளங்களித்து உங்கள் தொண்டிற்கு உதவி புரிவோம் என்பதற்கு அய்யமில்லை.
இங்ஙனம்
நீலமேகம் வாசகசாலையார், தாராசுரம்.
No comments:
Post a Comment